Tuesday, September 4, 2018

பூர்ண கொழுக்கட்டை| மோதக கொழுக்கட்டை | Mothagam Kozhukattai

பூர்ண கொழுக்கட்டை/மோதக கொழுக்கட்டை, சுவையான கடலை பருப்பு பூரணம் கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரியமான கொழுக்கட்டை. விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டைகளில் இந்த மோதக கொழுக்கட்டை ரொம்ப பிரசித்தம். பிடி கொழுக்கட்டை செய்வதை காட்டிலும் இதற்கு கொஞ்சம் நேரம் எடுத்தாலும், இதன் சுவை ரொம்ப நன்றாக இருக்கும். சிலபேருக்கு இந்த கொழுக்கட்டை செய்யும்போது மேல் மாவு வெடித்து வெடித்து போகுதுனு சொல்லி கேள்விப்பட்டிருகேன், எனக்கு ஆரம்பத்தில் அப்படி தான் ஆச்சு,அப்புறம் செய்ய செய்ய அதனுடைய நுணுக்கம் தெரிந்தது, அதை எல்லாம் இன்னைக்கு  இந்த பதிவில் ஷேர் பண்ணி இருக்கேன், விளக்கமான ஸ்டெப் பை ஸ்டெப் புகைப்படம் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் உதவியாக இருக்கும். வாங்க எப்போ எப்படி இந்த பூர்ண கொழுக்கட்டைசெய்யுறதுனு பார்க்கலாம்.

பூர்ண கொழுக்கட்டை| மோதக கொழுக்கட்டை

Preparation Time : 30 mins | Cooking Time : 20 minsMakes : 12 
Recipe Category: Sweet | Recipe Cuisine: Indian
தேவையான பொருட்கள்
பூர்ணத்துக்கு தேவையான பொருட்கள் 
கடலை பருப்பு - 1/2 கப் 
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் - 2 
வெல்லம் - 1/2 கப் 
மேல் மாவிற்கு தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப் 
சூடு தண்ணீர் - 3/4 -1 கப்
நல்லெண்ணெய்  - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையானளவு 

செய்முறை
முதலில் கடலை பருப்பை  ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கடலைப்பருப்பை சேர்த்து வேகவிடவும்.கடலை பருப்பை எடுத்து விரல்களில் இடையே வைத்து அழுத்தினால் மைய வேண்டும், அந்த பதத்தில் கடலை பருப்பை அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடித்து நன்கு ஒரு துணியில்/அல்லது tissue பேப்பர்-ல் உலர விடவும்.கடலை பருப்பு லேசாக உலர்ந்த பின் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.பின் ஒரு கடாயில் வெல்லம் மற்றும் அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து வெல்லம்  கரையும் வரை கொதிக்க விடவும்.பொடித்த ஏலக்காயை அதில் சேர்த்து கொள்ளவும்.அடுத்து அதில் பொடித்த கடலைப்பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும்.பூர்ணம் நன்கு கெட்டியாக வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறியபின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.இப்போது மேல் மாவிற்கு தேவையான மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்,கூடவே அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் ,அடுத்து அதில் நன்கு கொதிக்கும் தண்ணீரை சேர்த்து கெட்டியாக மாவை பிசைந்து கொள்ளவும். பின் அதனையும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். கையில் நன்கு எண்ணெய் தடவி கொள்ளவும்,ஒரு மாவு உருண்டையை எடுத்து விரல்களால் அழுத்தி சிறு கிண்ணம் போல  செய்து கொள்ளவும்.அதில் ஒரு பூரண உருண்டையை வைத்து நன்கு மேல் மாவால் மூடிக்கொள்ளவும்.இதே மாதிரி அனைத்தையும் மோதக கொழுக்கட்டையாக செய்து கொள்ளவும். பின் இட்லி சட்டியில்/வேக வைக்கும் பாத்திரத்தில் ஒரு 8-10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.சுவையான பூர்ண கொழுக்கட்டை/மோதக கொழுக்கட்டை தயார்.
குறிப்புக்கள் 
  • மேல் மாவிற்கு நன்கு நைசாக அரிசி மாவை பயன்படுத்தி கொள்ளவும்.
  • வெல்லத்தில் தூசி இருந்தால் வெல்லம் கரைந்த பின் அதனை ஒருமுறை வடிகட்டிக்கொள்ளவும்.
  • கொழுக்கட்டை செய்யும் போதும் மீதி மாவை ஒரு ஈர துணியால் மூடிவைக்கவும்,அப்போது தான் மாவு மேலே காயாமல் இருக்கும்.
  • நன்கு கொதிக்கும் தண்ணீரை மாவு பிசைவதற்கு பயன்படுத்தவும்.அப்போதுதான் மாவு நன்கு மிருதுவாக இருக்கும்
  • நன்கு கையில் எண்ணெய் தடவி கொள்ளவும்,அப்போதுதான் கொழுக்கட்டை ஒட்டாமல் நன்றாக வரும்.

1 comment:

  1. மிகவும் நல்ல பதிவு உபயோகமாக இருந்தது

    ReplyDelete